Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அயோத்தியில் 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிப்பு

நவம்பர் 08, 2019 02:54

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படுகிற சர்ச்சைக்குரிய வழக்கின் தீர்ப்பு விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதி முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்து, இந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ந் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 பேர் மேல்முறையீடு செய்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 பேரை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்துக்கு, குறிப்பாக அயோத்திக்கு பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவான உத்தரவு ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது.

அந்த உத்தரவில், பதற்றமான எல்லா இடங்களிலும் போதுமான பாதுகாப்பு படையினரை அமர்த்த வேண்டும்; நாட்டில் எங்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்